முதல்வர் இதை செய்துவிட்டால் நான் அரசியலை விட்டு விடுகிறேன்- சவால் விட்ட அண்ணாமலை!
மு.க.ஸ்டாலின் 100 மீட்டருக்கு சேதமடையாத சாலையில் சென்றால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று அண்ணாமலை சவால்விட்டுள்ளார்.
அண்ணாமலை
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தற்போது தமிழ்நாட்டின் அரசியல் காட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஆட்சியின் முக்கிய தலைவர்கள் தங்களது பரப்புரையை பல பகுதிகளில் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட பாஜக வேட்பாளராக அண்ணாமலை களமிறங்கியுள்ளார். அவர் தற்போது கோவையில் தனது சூராவளி பிரச்சாரத்தை செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக சரவணம்பட்டி, கரட்டுமேடு, கேஜி பேக்கரி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
அப்போது அண்ணாமலை பேசுகையில், “கோவை மாநகரில் ஏராளமான பிரச்சினைகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக 100 மீட்டருக்கு நடந்து சென்றால் சாலைகள் மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளது. இதையெல்லாம் திமுகவினர் சரி செய்யவில்லை.
அரசியலை விடுகிறேன்
பாஜக சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தோம். இதைக் கேட்டவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்” என்று கூறினார்.
மேலும், “கிரிக்கெட் மைதானம் எதற்காக காட்டப்படுகிறது என்றால் நான்காயிரம் கோடி ரூபாய் வரை கமிஷன் அடிக்கலாம் என்பதற்காகத்தான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் குறைந்தபட்சம் 100 மீட்டருக்கு சேதமடையாத சாலையில் நடந்து சென்றால் நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையை மேம்படுத்த ரூ.1,445 கோடி மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. ஆனாலும் கோவையில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படாமல் உள்ளது. குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.