தேர்தலில் போட்டியிடாதது ஏன்? என்னிடம் அவ்வளவு பணமில்லை - நிர்மலா சீதாராமன் விளக்கம்!:
தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன்
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக உள்ளார் நிர்மலா சீதாராமன். இவர் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், வருகின்ற மக்களவை தேர்தலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிடுவார் என பல்வேறு தகவல்கள் வெளியாகின. தமிழ்நாடு அல்லது ஆந்திராவில் அவர் போட்டியிட உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அவர் இத்தேர்தலில் போட்டியிடவில்லை.
என்னிடம் பணமில்லை
அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சீதாராமனிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர் அப்போது, “தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்குமாறு எங்களது கட்சி சார்பில் என்னிடம் தெரிவிக்கப்பட்டது.
நானும் அது குறித்து 10 நாட்கள் வரை யோசித்துப் பார்த்தேன். பின்னர் போட்டியிட விரும்பவில்லை என எனது முடிவை தெரிவித்தேன். தமிழகம் அல்லது ஆந்திராவில் இருந்து போட்டியிட எனக்கு பரிந்துரை வந்தது. பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா இதனை முன்மொழிந்தார்.
இருந்தும் நான் போட்டியிடவில்லை என சொன்னேன் என்றார் . மேலும், என்னிடம் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கான பணம் இல்லை. அதோடு தமிழகம் அல்லது ஆந்திராவில் போட்டியிட்டால் மதம், சாதி போன்றவை வெற்றிக்கான காரணிகளில் பிரதானமானதாக பார்க்கப்படும். அதனால் நான் தேர்தலில் போட்டியிடவில்லை. எனது முடிவை கட்சியும் ஏற்றுக் கொண்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.