திடீரென தடுமாறி தலைகீழாக கவிழ்ந்த கார்.. கணவன், மனைவி பலி - 4 பேர் படுகாயம்!
கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டதில் கணவன் மனைவி உயிரிழந்த சமத்துவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தடம் புரண்ட கார்
ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார் (36) - ரம்யா (32). இந்த தம்பதிக்கு தர்ஷன் மற்றும் அகிலன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் நால்வர் மற்றும் ரம்யாவின் தாய், தந்தை ஆகிய 6 பேரும் பழனி முருகன் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
அங்கு தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்பும்போது காங்கேயம் அருகே தாராபுரம் சாலையில் வட்டமலை என்ற பகுதியில் கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. அந்த சாலையில் தலைகீழாக விழுந்து புரண்டது.
இருவர் பலி
இந்நிலையில், அங்கு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயங்களுடன் இருந்த இவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலே ரம்யா மற்றும் மதன்குமார் உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.
மேலும், மற்ற 4 பேரும் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.