ஐபிஎல் பெட்டிங்கில் ரூ.1.5 கோடி இழந்த கணவன் - 24 வயது மனைவி விபரீத முடிவு!
ஐபிஎல் ஆன்லைன் சூதாட்டத்தில் கணவன் பணத்தை இழந்த நிலையில், கடன்காரர்கள் தொல்லையால் அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஐபிஎல் சூதாட்டம்
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கிரிநகரை சேர்ந்த தம்பதி தர்ஷன் பாபு (30) - ரஞ்சிதா (24). இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளார். மென்பொருள் பொறியாளரான தர்ஷன் பாபு, பெங்களூருவில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த 2022-ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கு மனைவி ரஞ்சிதா பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், அதனை அவர் கண்டுகொள்ளவில்லை. தொடக்கத்தில் கையிலிருந்த பணத்தை இழந்த தர்ஷன், பின்னர் கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபட்டு ரூ.1.5 கோடிக்கும் அதிகமாக இழந்தார்.
மனைவி தற்கொலை
இதனையடுத்து அவருக்கு கடன் கொடுத்தவர்கள் அதனை திருப்பி தருமாறு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் தனது நிலத்தை விற்று ரூ.70 லட்சம் கடனை அடைத்துள்ளார். மீதமுள்ள ரூ.84 லட்சத்தை திரும்ப தரக்கோரி தர்ஷன் பாபுவுக்கும், ரஞ்சிதாவுக்கும் கடன் கொடுத்தவர்கள் தொல்லை கொடுத்துள்ளனர்.
இதனைத் தாங்க முடியாமல் ரஞ்சிதா, தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பெங்களூரு போலீசார் நடத்திய விசாரணையில், அவரின் படுக்கையறையிலிருந்து 2 பக்க தற்கொலை கடிதத்தை கைப்பற்றினர்.
அதில், தனது கணவர் ஐபிஎல் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்தது, குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை, கடன் கொடுத்தவர்களின் மிரட்டல் ஆகியவற்றை ரஞ்சிதா குறிப்பிட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.