பசிக்குதா.. எடுத்துக்கோங்க: ‘நெகிழ வைக்கும்’ இளம்பெண்ணின் வைரல் செயல்
கோவை மாநகரில் ஏழை மற்றும் ஆதரவற்றவர்களின் பசியைப் போக்குவதற்காக இளம் இல்லத்தரசி ஒருவர் 20 ரூபாய்க்கு பிரியாணி வழங்கும் சம்பவம் மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாநகரம் புலியகுளம் பகுதியில் உள்ள ரெட்பீல்ஸ் சாலையில் வசித்து வருபவர்கள் தான் சதீஷ், சப்ரினா என்கிற தம்பதியர்.
சென்னையை சேர்ந்த இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சதீஷ் திருப்பூரில் முட்டை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். பிஎஸ்சி சைக்காலஜி படித்துள்ள சப்ரினா தமது வீட்டின் முன்பு சிறிய அளவில் சாலையோர உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். அதன்படி 20 ரூபாய்க்கு பிரியாணி விற்கப்படும் இந்த கடை மதியம் 12 முதல் 3 மணி வரை இயங்கும்.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கடைக்கு முன்பு உள்ள பெட்டி ஒன்றில் பிரியாணி பொட்டலங்களை வைத்து அதில், “பசிக்குதா எடுத்துக்கோங்க!” என்று கரும்பலகையில் எழுதி வைத்திருக்கிறார். இந்த பெட்டியில் வைக்கப்பட்டுள்ள பிரியாணி பொட்டலங்களை ஏழை எளியோர் மற்றும் ஆதரவற்றவர்கள் விலையில்லாமல் எடுத்துச் சென்று சாப்பிட்டு பசி தீர்த்துக் கொள்கின்றனர்.