கலவரம் செய்தால் தான் பாஜக வளரும்..சொன்ன நிர்வாகி - ஆக்ஷன் எடுத்த அர்ஜுன் சம்பத்!!
நீக்கம்
தமிழகத்தில் பாஜக காலூன்ற வேண்டுமென்றால், கலவரம் செய்தால் தான் முடியும் என பேசிய இந்து மக்கள் கட்சியின் நிர்வாகியை கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தற்காலிகமாக நீக்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவரும் முன்னாள் மாவட்ட தலைவருமான திரு. உடையார் அவர்கள் கட்சி கொள்கைகளுக்கு விரோதமாக கலவரம் செய்தால் தான் பாஜக வளரும் என்று தொலைபேசி உரையாடலில் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மேலும் பாரதிய ஜனதா கட்சியின் உள் விவகாரங்களில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி தலையிடுவது இந்து மக்கள் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானதாகும். பாஜக மாவட்ட தலைவரோடு தான் நடத்திய உரையாடலை பதிவு செய்து பொதுவெளியில் வெளியிட்டு ஹிந்து இயக்கங்களின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார்.
கைது
எனவே இந்து மக்கள் கட்சியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார். இது அவர் மீது மேற்கொள்ளப்படும் ஒழுங்கு நடவடிக்கை ஆகும். 90 நாட்களுக்குள் அவரிடம் விளக்கம் கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அறிக்கை! pic.twitter.com/kvDpsu5GpR
— Arjun Sampath (@imkarjunsampath) June 11, 2024
அவரோடு கட்சி நிர்வாகிகள் யாரும் இணைந்து செயல்பட்டால் அவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக இந்து மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் உடையார் நெல்லையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடையார் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் பாளையங்கோட்டை எஸ்.ஐ. துரைபாண்டி புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.