மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி? 14 மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்பு!
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட, 14 மாவட்டங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அத்துடன், வடக்கு அந்தமான் கடல் பகுதியில், நாளை உருவாகும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால், 22ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 24 வரை, இந்த நிலை தொடர வாய்ப்புள்ளது.திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை
நாளை மறுநாள், வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், அரியலுார், கடலுார், விழுப்புரம், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில், இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.