சாப்பிட்டுக்கொண்டிருந்த போது ஏற்பட்ட நெஞ்சுவலி - மயங்கி விழுந்த எஸ்.ஐ மரணம்
சென்னை, அசோக் நகரைச் சேர்ந்தவர் ரத்தினவேல். இவரின் மகன் விஜய் பாபு (41). இவர் சென்னையில் பொருளாதார குற்றப்பிரிவு, சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
இவரின் மனைவி சரண்யா (38). இவர் வடபழனி காவல் நிலையத்தில் காவலராக உள்ளார். இந்நிலையில், நேற்று இரவு விஜய் பாபுவுக்கு லேசான நெஞ்சுவலி வந்துள்ளது.
இதனையடுத்து விஜய் பாபு வீட்டில் உள்ளவர்களிடம், தி. நகரில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதாக கூறி இருக்கிறார். ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லாமல் வீடு திரும்பியுள்ளார். பிறகு, வீட்டிற்கு வந்த அவர் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது விஜய்பாபு அங்கேயே மயங்கி கீழே விழுந்துள்ளார்.
மயங்கி மரணம்
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் உள்ளவர்கள் விஜய் பாபுவை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மருத்துவமனையில் விஜய் பாபுவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வடபழனி காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விஜய்பாபு உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.