முஸ்லீம்களுக்கு வீடு, கடை வாடகைக்கு இல்லை; 144 தடை - வெடிக்கும் கலவரம்!
முஸ்லிம்களைப் புறக்கணிக்கப்போவதாக 14 கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
வெடித்த கலவரம்
ஹரியானா, நுஹ் என்ற இடத்தில் கடந்த மாதம் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் பேரணி நடத்தியபோது, கல்வீச்சுத் தாக்குதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. அது மற்ற பகுதிகளுக்கும் பரவியது.
இதில் ஏராளமான வீடுகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. ஊர்க்காவல் படையினர் இரண்டு பேர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். கலவரம் பாதித்த பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
144 தடை
இந்நிலையில், மகேந்திரகர், ஜஜ்ஜார், ரவேரி போன்ற பகுதிகளிலிருக்கும் 14 கிராம மக்கள், முஸ்லிம்களைப் புறக்கணிப்பது என்று முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து, 3 மாவட்டத்திலுள்ள 14 கிராம மக்கள் போலீஸார் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், `முஸ்லிம்களுக்கு வீடு மற்றும் கடை வாடகைக்குக் கொடுக்கமாட்டோம். தெருக்களில் வியாபாரம் செய்ய வருபவர்களைக்கூட அடையாள அட்டையைப் பார்த்துவிட்டுத்தான் கிராமத்துக்குள் அனுமதிப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குருகிராம் கவுன்சிலர் பிரம் யாதவ், வால்மீகி இன மக்கள் இறைச்சிக்கடைகளை நடத்த வேண்டும். முஸ்லிம்கள் நடத்தக்கூடிய கடைகளைப் புறக்கணிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பாஜக அரசு, கலவரத்தில் ஈடுபட்டவர்களின் வீடு மற்றும் கடைகளை புல்டோசர் கொண்டு இடித்து வருகிறது.