குடிப்பதற்கு பணம் தராததால் பாட்டியை கொடூரமாக வெட்டிக்கொன்ற பேரன் கைது!
குடிப்பதற்கு பணம் தராததால் பாட்டியை கொடூரமாக வெட்டிக் கொன்று விட்டு தப்பி ஓடி தலைமறைவாக இருந்த பேரனை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு பகுதியில் வசித்து வந்தவர் சாந்தி (60). இவருடைய பேரன் அஜித் (22). கடந்த செவ்வாய்க்கிழமை அன்று குடிப்பதற்கு பாட்டியிடம் பணம் கேட்டுள்ளான் அஜித்.
பணம் தராததால் ஆத்திரத்தில் தனது பாட்டியின் கழுத்தை கத்தியால் வெட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு அஜித் தப்பி ஓடி தலைமறைவானான். இது குறித்து தகவலறிந்த காட்பாடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

தப்பியோடிய பேரனை வலைவீசி தேடி வந்த போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை வைத்து அஜித்தை இன்று காட்பாடி பகுதியில் போலீசார் கைது செய்தனர்.
அவனிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் குடிப்பதற்கு பணம் கொடுக்காததால் ஆத்திரத்தில் பாட்டியை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.