லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..அரசு கடமையை செய்கிறது - பல்டி அடித்த ஓபிஎஸ்?
தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை தன் கடமையை தான் செய்கிறது என ஓபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் மரியாதை
தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அண்ணா சாலை ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள பெரியார் உருவச்சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மரியாதை செலுத்தினார். அடஹ்னைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"சாதாரண கிராம புறங்களில் பிறந்தவர் கூட உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என போராடி அதில் வெற்றி கண்டவர் பெரியார். அவரது கொள்கைகள் தமிழகத்தில் ஆழமாக விதைக்கப்பட்டு ஆலமரமாக வளர்ந்து இருக்கிறது. அவருக்கு அதிமுக சார்பாக இதயபூர்வமான புகழஞ்சலி செலுத்தினோம்.
வேதவாக்கு
பண்ருட்டி ராமச்சந்திரன் பெரியார் , அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உள்ளிட்டோருடன் உடனிருந்து பயணித்தவர். ஐ.நா சபையில் உரையாற்றிய பெருமையை அதிமுகவுக்கு பெற்று தந்தவர். அரசியல் காரணங்களுக்காக பல பேர் கருத்துக்களை சொல்லி கொண்டு இருப்பார்கள் அதை புறந்தள்ளி அவரது தொண்டையும், தியாகத்தை மட்டுமே எண்ணி செயல்பட வேண்டும்.
நான் ஜெயலலிதாவோடு 21 வருடம் பணியாற்றிவன். பலமுறை என்னை பற்றி அவர் மனதில் உள்ளதை சொல்லி இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அம்மாவின் வாக்கு தான் வேதவாக்கு, மற்றவர்களின் வாக்கு என்ன வாக்கு என்பதை நான் சொல்லவில்லை அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
நிரூபிக்க வேண்டிய கடமை
முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓ.பி.எஸ், அரசு அவர்களது கடமையை செய்கிறார்கள், நிரூபிக்க வேண்டிய கடமை குற்றம்சாட்டப்பட்டவர்களின் பொறுப்பு.
திமுக அரசு உங்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காதது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எனக்கு ஜெயலலிதா இரண்டு முறை அமைச்சர் பதவி கொடுத்தார். 13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதலமைச்சராக பதவியை தந்தார்.
ஜெயலலிதாவுக்கு விசுவாசமிக்க தொண்டனாக தான் பணியாற்றியுள்ளேன், தலைவர் என்ற நிலைக்கு என்றுமே சென்றதில்லை" என தெரிவித்தார்.