ஈபிஎஸ்-ஐ பார்க்க அனுமதி மறுப்பு - அப்படியே ரோட்டில் உட்கார்ந்து தர்ணாவில் ஜி.கே.வாசன்
எடப்பாடி பழனிசாமியை சந்திக்க மறுக்கப்பட்டதால் ஜி.கே.வாசன் சாலை மறியலில் ஈடுபட்டார்.
எடப்பாடி கைது
எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்பி உதயகுமாரை பேரவையில் அங்கீகரிக்காததை கண்டித்து இன்று அதிமுக சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். ஆனால் இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தடையை மீறி, ஆர்ப்பாட்டம் செய்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர். அதனையடுத்து, அவர்கள் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டு எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அனுமதி மறுப்பு
அங்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்ணீர், உணவை சாப்பிடாமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அங்கு ஈபிஎஸ்-ஐ பார்க்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் வந்தார்.
அப்போது அவருக்கு போலீஸாரால் அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் வாசன் மற்றும் போலீஸாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் திடீரென ஜி.கே.வாசன் ஆதரவாளர்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
வாசன் தர்ணா
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசு அடக்குமுறையில் ஈடுபட்டு வருகிறது. மேலும் சட்டமன்றத்திலும், வெளியிலும் நடப்பதை மக்கள் பார்த்து வருகிறார்கள்.
இது அரசின் வருங்கால பணிகளுக்கு ஏற்புடையதாக இல்லை. இது மக்கள் விரும்பாத செயல்களில் அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.