காதலனுக்கு 'டீ'யில் எலி மருந்து - மாணவி பரபரப்பு வாக்குமூலம்!
காதலனுக்கு எலி மருந்து கலந்து கொடுத்த மாணவி பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார்.
எலி மருந்தில் விஷம்
விழுப்புரத்தைச் சேர்ந்தவர் 23 வயதுடைய இளைஞர். இவர் ஆந்திராவில் உள்ள சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். தனது வீட்டிலேயே இ-சேவை மையமும் வைத்துள்ளார்.
இதன் மூலம் இவருக்கும், தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் 20 வயதுடைய மாணவிக்கும் 2 ஆண்டுக்கு முன்னதாக காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களது காதலுக்கு 2 வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
ஏனெனில், இருவரும் அண்ணன், தங்கை உறவு முறை என்று கூறப்படுகிறது. எனவே, அந்த இளைஞர், காதலியுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இருப்பினும், அந்த மாணவி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், மாணவி, தனது காதலனை தனது வீட்டிற்கு அழைத்து வந்து காலாவதியான எலி மருந்தை 'டீ'யில் கலந்து கொடுத்துள்ளார்.
காதலி வாக்குமூலம்
அதை குடித்த அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பின் இதுகுறித்து மாணவரின் தந்தை அளித்த புகாரில், காதலியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் அவர் கூறுகையில், அண்ணன்-தங்கை உறவு முறை வருவதாக கூறி எங்களது திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
2 ஆண்டாக ஆசை, ஆசையாக காதலித்த காதலனை திருமணம் செய்யக்கூடாது. அவரிடம் பேசக்கூடாது என்று கூறுகிறார்கள். என்னால் அவரை மறக்க முடியாது. எனவே காதலித்தவரையே திருமணம் செய்ய என்ன செய்யலாம் என்று யோசித்தேன். இருவரில் யாராவது விஷம் குடித்தது போன்று நடித்தால் பெற்றோர் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள் என்று காதலனிடம் கூறினேன்.
அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார். அதன்படி அவரை வீட்டிற்கு அழைத்து 'டீ'யில் எலி மருந்து(விஷம்) கலந்து கொடுத்து விட்டேன். குடித்த சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்த அவரது வாயில் இருந்து நுரை தள்ளியது. உடனே உறவினர்கள் மூலம் மருத்துவமனையில் சேர்த்தேன். மற்றபடி அவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கம் எனக்கு கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.