இன்னும் மனசு வலிக்குது, ஆனால் இது என் கடமை.. போரில் குடும்பத்தை இழந்த செய்தியாளரின் நெகிழ்ச்சி சம்பவம்!
இஸ்ரேல் போரில் குடும்பத்தை இழந்த செய்தியாளர் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போர்
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய நாட்டிற்கு இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. ஹமாஸ் தாக்குதலால் பலர் உயிரிழந்தனர், மேலும், சிலரை பிணை கைதியாக வைத்துள்ளனர். இவர்களது தாக்குதலால் இஸ்ரேல் எதிர்தாக்குதலை நடத்தியது, இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் பல செய்தியாளர்களும் பலியாகியுள்ளனர்.
காசாவில் பாதுகாப்பான இடம் இல்லை என பொதுமக்கள் கதறி வருகின்றனர். தற்பொழுது கத்தாரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அல் ஜசீரா ஊடகத்தின் காசா பிரிவு செய்தியாளராக பணியாற்றியவர் வல் அல் ததோ.
இவரின் மனைவி, மகன், மகள், பேரன் என நால்வர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு ஊடகம் நேற்று செய்தி வெளியிட்டது.
செய்தியாளர்
இந்நிலையில், இவர் தனது குடும்பத்தினரின் இறுதிச் சடங்கை முடித்துவிட்டு இன்று தன்னுடைய பணிக்கு திரும்பியிப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர், "எங்கும் துப்பாக்கிச் சூடு நடந்து கொண்டிருக்கிறது. வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
என்னுடைய மனதில் இன்னும் வலி இருக்கிறது. இருந்தாலும், மீண்டும் கேமரா முன்பு வந்து பேசுவது, சமூக ஊடகங்கள் மூலம் மக்களை தொடர்பு கொள்வது எனது கடமை என உணர்ந்தேன்" என்று கூறியுள்ளார்.