இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்புகிறீர்களா? பதிலளித்த கம்பீர்
அபுதாபியில் உள்ள மெடோர் மருத்துவமனையில் இளம் விளையாட்டு ஆர்வலர்களுடன் கம்பீர் உரையாடினார்.
புதிய பயிற்சியாளர்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக 2021 ல் நியமிக்கப்பட்ட ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் 2024 டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது. பிசிசிஐ புதிய தலைமைப் பயிற்சியாளருக்கான தேடலில் இறங்கியுள்ளது. மே 13ம் தேதி முதல் மே 27 ம் தேதி வரை இதற்கான விண்ணப்பங்களை பெற்றது.
இந்நிலையில் கவுதம் கம்பீர் தான் இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட உள்ளார் என தகவல் வெளியானது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூட கம்பீருக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்.
கம்பீர் பதில்
இந்நிலையில் அபுதாபியில் உள்ள மெடோர் மருத்துவமனையில் இளம் விளையாட்டு ஆர்வலர்களுடன் கம்பீர் உரையாடினார். அப்போது கம்பீரிடம் இந்திய அணிக்கு பயிற்சியாளராக விரும்புகிறீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு
"நான் இந்திய அணியின் பயிற்சியாளராக வருவதற்கு விரும்புகிறேன். உங்களுடைய தேசிய அணியின் பயிற்சியாளராக இருப்பதை விட வேறு பெரிய கௌரவம் இருக்க முடியாது. ஏனெனில் நீங்கள் 140 கோடி இந்தியர்களின் பிரதிநிதியாக இருப்பீர்கள்.
எனவே இந்தியாவின் பிரதிநிதியாக இருப்பதை விட வேறு என்ன பெரிதாக இருக்க முடியும். நான் உதவ போவதில்லை. உண்மையில் இந்தியாவுக்காக நான் உலகக் கோப்பையை வெல்வதற்கு உதவப் போவதில்லை.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
140 கோடி இந்தியர்கள் தான் உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு உதவுவார்கள். எங்களுக்காக அனைவரும் வேண்டிக்கொண்டால் அவர்களுக்காக நாங்கள் விளையாடத் துவங்கினால் இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் அதற்கு மிகவும் முக்கியமாக பயமின்றி விளையாட வேண்டும்” என்று கூறினார்.
தற்பொழுது கவுதம் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக உள்ளார். இவர் ஆலோசகராக வந்ததும், 10 வருடங்கள் கழித்து கொல்கத்தா அணி 2024 ஐபிஎல் கோப்பையை வென்றது குறிப்பிட தக்கது.