எனக்கு மட்டும் டைம் மெஷின் கிடைத்தால்; 2011 உலகக் கோப்பையில்.. - கவுதம் கம்பீர்!
2011 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பேசியுள்ளார்.
உலகக்கோப்பை
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2011 இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டது. மேலும், இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் அபாரமாக விளையாடி வெற்றிவாகை சூடியது.
இந்த போட்டியில் நிலைத்து விளையாடிய கம்பீருடன் சேர்ந்த தோனி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார். மேலும், 91 ரன்கள் குவித்து இந்தியா கோப்பையை வெல்ல உதவினார். கவுதம் கம்பீர் 97 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
டைம் மெஷின்
இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருது தோனிக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவுதம் கம்பீர் "2011 உலகக்கோப்பை பைனலை நான் பினிஷிங் செய்திருக்க விரும்புகிறேன். அங்கே யாரோ ஒருவரிடம் பொறுப்பை விடுவதை விட பினிஷிங் செய்ய வேண்டியது என்னுடைய வேலையாக இருந்தது.
ஒருவேளை டைம் மெஷின் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் அங்கே நான் சென்று எவ்வளவு ரன்கள் அடிக்கிறேன் என்பதை தாண்டி வெற்றியை கொடுக்கும் கடைசி ரன்னை அடிக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.