எதிர்க்கட்சிகள் கூட்டம் பா.ஜ.க.வுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
பெங்களூரில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
பா.ஜ.க.வுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது
அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சிகள் கூட்டம் பா.ஜ.க.வுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. வட மாநிலங்களில் செய்தது போல, தமிழ்நாட்டிலும் அமலாக்கத்துறை மூலம் பா.ஜ.க. அதன் நடவடிக்கையை தொடங்கி உள்ளது.
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அமைச்சர் பொன்முடி மீது போடப்பட்ட பொய் வழக்குதான் இந்த வழக்கு. எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது.
பொன்முடி சட்டப்படி சந்திப்பார்
ஆளுநருடன் தற்போது அமலாக்கத்துறையும் இணைந்துள்ளதால் வருகின்ற தேர்தல் எங்களுக்கு சுலபமாக இருக்கும். தன் மீதான வழக்குகளை அமைச்சர் பொன்முடி சட்டப்படி சந்திப்பார்.
இதற்கெல்லாம் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். எந்த சவாலையும் சந்திக்க தி.மு.க. தயாராக உள்ளது. காவிரி மேகதாது அணை விவகாரத்தில், கருணாநிதி எடுத்த முடிவில் நாங்களும் உறுதியாக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.