கங்குலி இருதயத்தில் இருந்த அடைப்பு நீக்கப்பட்டது: 24 மணி நேரம் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பார்
இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இருதயத்தில் இருந்த அடைப்பு முழுவதுமாக நீக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக உள்ளார்.
இந்த நிலையில் 48 வயதான கங்குலிக்கு நேற்று திடீரென லேசான மாரடைப்பு ஏற்பட்டது.
உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது இருதயத்துக்கு செல்லும் ரத்தகுழாயில் 3 அடைப்புகள் இருந்தது தெரியவந்தது. இதில் ஒரு அடைப்பு 90 சதவீத அளவிற்கு மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இதைத்தொடர்ந்து உடனடியாக அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது.
இதில் ஒரு அடைப்பு நீக்கப்பட்டது. கங்குலியின் உடல்நலம் தொடர்பாக டாக்டர் ஒருவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கங்குலிக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர் 24 மணி நேரம் கண்காணிப்பில் உள்ளார். அவரது இருதயத்தில் தற்போது 2 அடைப்புகள் உள்ளன. அதற்கான சிகிச்சை அவருக்கு அளிக்கப்படும்.