நள்ளிரவில் திடீரென வெடித்த பிரிட்ஜ் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உடல் கருகி பலியான சோகம்!
பாகிஸ்தானில் நள்ளிரவில் திடீரென பிரிட்ஜ் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உடல்கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீ விபத்து
பாகிஸ்தானின் வடகிழக்கு மாகாணத்தில், பஞ்சாப்பின் தலைநகராக லாகூர் உள்ளது. அங்கு மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியான நூர் மெகல்லாவில் ஒரு வீட்டில் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர்.
அங்கு நள்ளிரவு 2 மணியளவில் பயங்கர சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது, இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வந்த போலீசார் கட்டிடத்தில் பரவி இருந்த தீயினை போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
விசாரணை
இந்நிலையில், தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர், அப்பொழுது அங்கு உடல்பாகங்கள் கருகிய நிலையில் ஆங்காங்கே கிடந்துள்ளது. இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து, போலீசார் தடயவியல் நிபுணர்களுடன் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்பொழுது திடீரென மின்கசிவு ஏற்பட்டதாகவும், அதனால் பிரிட்ஜின் கம்ப்ரசர் வெடித்து சிதறி கரும்புகை ஏற்பட்டுள்ளது. இதனை சுவாசித்ததால் குடும்பத்தினருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்தில் உறங்கிக்கொண்டிருந்த 7 மாத குழந்தை, 5 சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே உடை கருகி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.