பெருக்கெடுத்த வெள்ளம்; 45 வருஷத்திற்குப் பின்.. தாஜ்மஹால் சுவரை அடித்துச் செல்வதால் அதிர்ச்சி!
45 ஆண்டுகளுக்குப் பின்னர் தாஜ்மஹாலின் சுவர்களை வெள்ள நீர் தொட்டுச் செல்கிறது.
வெள்ள அபாயம்
வட மாநிலங்களான, டெல்லி, உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கங்கை, யமுனை ஆகிய ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
இந்நிலையில் யமுனை ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி நீர்மட்டம் 206.01 மீட்டராக அதிகரித்தது. இருகரைகளையும் தாண்டி வெள்ள நீர் செல்வதால் அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இதற்கிடையில், 45 ஆண்டுகளுக்குப் பின்னர் தாஜ்மஹாலின் சுவர்களைத் தொட்டுக் கொண்டு யமுனை ஆற்றில் வெள்ள நீர் செல்கிறது. அங்கு அமைந்துள்ள பூங்காவையும் மூழ்கடித்தபடி வெள்ளம் செல்வதாக புகைப்படங்கள் வெளியாகியது.
வெள்ள நீரானது, பிரதான கட்டுமானத்துக்குள் நுழைந்து விடாமல் இருக்குமாறு உறுதி செய்யப்பட்டு கட்டிடம் வடிவமைக்கப்பட்டு அதன்படி கட்டப்பட்டுள்ளது.
இருந்தபோதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கைலாஷ் கோயில் அருகேயும், தசரா படித் துறை அருகேயும் தண்ணீர் நுழைவதைத் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஏஎஸ்ஐ அதிகாரி பிரின்ஸ் வாஜ்பாயி கூறியுள்ளார்.