தாஜ்மஹாலில் உள்ள பாதாள அறைகள் - இந்திய தொல்லியல் துறை வெளியிட்ட படங்கள் வைரல்
தாஜ்மஹாலில் உள்ள பாதாள அறைகள் அடங்கிய புகைப்படங்களை இந்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றாகவும், காதலின் அடையாளமாகவும் பார்க்கப்படும் தாஜ்மஹாலின் மூடிய 22 அறைகள் குறித்து தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. சமீபகாலமாக தாஜ்மஹால் கட்டுப்பட்டுள்ள இடத்தில் சிவன் கோயிலிருந்ததாகவும், அதனை இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் அழித்தனர். மேலும் அதன் மேலேயே தாஜ்மஹாலைக் கட்டியுள்ளனர் எனவும், தாஜ்மஹால் இந்தியாவின் அடையாளமே அல்ல எனவும் தொடர்ந்து இந்துத்துவ அமைப்புகள் சில சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தாஜ்மஹாலில் பூட்டப்பட்டுள்ள 22 அறைகளைத் திறந்து ஆய்வு செய்ய வேண்டும் என பாஜக இளைஞர் ஊடகப் பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு முன்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல் மனுதாரருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில்இந்திய தொல்லியல் துறையின் ஜனவரி 2022 அறிக்கையின் 20 வது பக்கத்தில் தாஜ்மஹாலின் சில அறைகளின் படங்களை வெளியிடப்பட்டுள்ளது. இவை சமீபத்தில் பராமரிப்பு பணிகள் நடந்த இடமாகும். இந்த அறைகளின் மறுசீரமைப்பு பணிக்கு ரூ.6 லட்சம் செலவிடப்பட்டதாக தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பூட்டிய 22 அறைகள் குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு இந்திய தொல்லியல் துறை முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.