ரேஷன் கடையில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு - இந்த மாவட்டங்களில் வழங்க தமிழக அரசு உத்தரவு

Tamil nadu
By Nandhini Jun 18, 2022 05:58 AM GMT
Report

ரேஷன் கடைகளில் அரிசி வாங்கும் அட்டைதாரர்களுக்கு விருப்பப்பட்டால் அரிசிக்கு பதிலாக அவர்கள் 2 கிலோ கேழ்வரகை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 8ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டசபையில் உணவுத்துறை அமைச்சர் பேசும்போது, பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ கேழ்வரகை (ராகி) அரிசிக்குப் பதிலாக வழங்கும் திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் கடிதம்

இந்த அறிவிப்பையடுத்து அரசுக்கு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் கடிதம் எழுதி இருக்கிறார்.

இந்நிலையில், அக்கடிதத்தில் -

கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் கேழ்வரகு பயிரிடப்படும் பகுதியும், உற்பத்தியின் அளவும் உயர்ந்த வண்ணம் இருக்கிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கேழ்வரகு அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கொள்முதல் இந்த திட்டத்தின்படி நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட அரிசி ரேஷன் அட்டைதாரர்கள், அரிசிக்கு பதிலாக அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் 2 கிலோ கேழ்வரகை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். அதற்காக, நீலகிரி மாவட்டத்திற்கு 920 டன் கேழ்வரகும், தர்மபுரி மாவட்டத்திற்கு 440 டன் கேழ்வரகும் என சேர்த்து மொத்தம் 1,360 டன் கேழ்வரகு தேவைப்படுகிறது. ரேஷன் கடைகளில் அரிசி வாங்கும் அட்டைதாரர்களுக்கு விருப்பத்தின் பேரில் தற்போது கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.

கோதுமை, இந்திய உணவு கழகத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. கேழ்வரகையும் இந்திய உணவு கழகத்திடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்திற்கு கேழ்வரகு எவ்வளவு தேவையோ, அதற்கேற்ப கோதுமை ஒதுக்கீட்டை சரி செய்துகொள்ள முடியும்.

அதுபற்றி இந்திய உணவு கழகத்திடம் கோரிக்கை வைக்க வேண்டும். கோதுமைக்கு பதிலாக கேழ்வரகை கொள்முதல் செய்வதால் கூடுதல் செலவு ஏற்படவில்லை. ஏனென்றால், கோதுமை கிலோவுக்கு ரூ.2 என்றும், கேழ்வரகு கிலோவுக்கு ரூ.1 என்றும் இந்திய உணவு கழகத்தின் மூலம் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

ரேஷன் கடையில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு - இந்த மாவட்டங்களில் வழங்க தமிழக அரசு உத்தரவு | Finger Millet Ration Shop

தமிழக அரசு உத்தரவு

நிர்வாக ஒப்புதல் அவரது கருத்துகளை அரசு கவனமுடன் பரிசீலித்தது. இதனையடுத்து, நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில், அரிசிக்கு பதிலாக மாதம் ஒன்றுக்கு ஒரு குடும்பத்திற்கு அவர்கள் விருப்பப்பட்டால் 2 கிலோ கேழ்வரகை வழங்கும் முன்னோடி திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதலை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.