இனி ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு கிடையாது.. அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு
தமிழத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு கண் கருவிழி பதிவு முறை கொண்டு வரப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகை பதிவுக் கொண்டு பொருட்கள் வழங்கும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் சில நேரம் தொழில் நுட்ப கோளாறுகள் ஏற்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. அதேசமயம் பலரது கைரேகைகள் பதிவாக மறுப்பதால் பொருட்கள் வாங்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்.
இதனிடையே மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் கண் கருவிழி பதிவு முறை மூலம் பொருட்கள் வாங்கும் முறையை அறிமுகம் செய்ய உள்ளோம் என தெரிவித்தார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 100 சதவீதம் கண் கருவிழி மூலமாக பொருட்கள் வாங்கும் நிலை உள்ளது.
கைரேகை பதிவு இயந்திரத்தில் வயல் வெளியில் வேலை பார்ப்பதால் சிலரது கைரேகைகள் பதிவாகுவதில்லை என்றும், இதனால் அவர்கள் பொருள் வாங்குவது கடினமானதாக இருக்கிறது என்றும் கூறப்பட்டது. இத்தகைய நிலையை தவிர்க்கும் பொருட்டு கண் கருவிழி பதிவு முறை அமலுக்கு வரவுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.