நாயை மாதிரி தூக்கி எறியனும் - பெண் பத்திரிகையாளரை கடுமையாக சாடிய டிரம்ப்
ஒரு நாயை போல தூக்கி எறிய வேண்டும் என பெண் பத்திரிக்கையாளரை டிரம்ப் சாடியுள்ளார்.
செய்தியால் சலசலப்பு
அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்தி ஒன்றில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் அணு உலைகள் அழிக்கப்படவில்லை.
அமெரிக்காவின் பாதுகாப்பு உளவு அமைப்பு நடத்திய தொடக்க மதிப்பீட்டில் தாக்குதல்கள் தற்காலிக பாதிப்புகளையே ஏற்படுத்தியது. இதனால், ஈரான் ஒரு சில மாதங்களே அணு திட்டத்தில் ஈடுபட முடியாமல் போகும். ஈரானின் அணு உலைகள் தொடர்ந்து செயல்படும் வகையில் நன்றாகவே உள்ளன.
செறிவூட்டப்பட்ட யுரேனிய பொருட்கள் முன்பே பாதுகாப்பாக வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விட்டன என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஈரானில் நடந்த ராணுவ தாக்குதல் வெற்றி என டிரம்ப் கூறி வந்த நிலையில், இந்த செய்தி சலசலப்பை ஏற்படுத்தியது.
டிரம்ப் காட்டம்
இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், இது பொய்யான செய்தி. அமெரிக்க வரலாற்றில் வெற்றியடைந்த ராணுவ தாக்குதல்களில் இதுவும் ஒன்று. இதனை குறைத்து மதிப்பீடு செய்யும் வகையில் சி.என்.என். மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனங்கள் இணைந்து முயற்சித்து உள்ளன. சி.என்.என்.னில் இருந்து நடாஷா பெர்டிராண்டை நீக்க வேண்டும்.
3 நாட்களாக பொய்யான செய்திகளை பரப்பும் அவரை நான் கவனித்து கொண்டுதான் இருக்கிறேன். அவரை உடனடியாக கண்டிக்க வேண்டும். அதன்பின்னர், ஒரு நாயை போன்று தூக்கி எறிய வேண்டும். லேப்டாப்பை திறந்ததும் பொய் செய்தியையே பரப்பும் வேலையில் ஈடுபடுகிறார். அணு உலைகள் பற்றிய பொய்யான புனைவுகளை வெளியிடுகிறார்.
நம்முடைய பேட்ரியாட் விமானிகள் உண்மையில் சிறந்த பணியை செய்துள்ளனர். முற்றிலும் அழிவுக்கான வேலையை செய்து விட்டனர். ஆனால், அவர்களை மோசமாக சித்தரிக்கும் வகையிலான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார். பொய் செய்தியை வெளியிடும் சி.என்.என்.னில் அவரை வேலை செய்ய அனுமதிக்க கூடாது எனத் தெரிவித்துள்ளார்.