தொடர்ந்து பிறந்த பெண் குழந்தை - கோபத்தில் அடித்து கொன்ற கொடூர தந்தை
தொடர்ந்து 3 வது குழந்தை பெண் குழந்தையாக பிறந்துள்ளதால் தந்தை குழந்தையை கொன்றுள்ளார்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை சேர்ந்த கூலித் தொழிலாளி மாதையன். இவருக்கு ஏற்கனவே முனியம்மா என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விட்டார். இதன் பின் மாதையன் சின்னம்மா என்பவரை 2ஆம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 12 வயதில் மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.
இதனிடையே மீண்டும் கர்ப்பமான சின்னமாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து 14 நாட்களே ஆன நிலையில், தொடர்ந்து 3வது முறையாக பெண் குழந்தை பிறந்ததால் விரக்தியடைந்த மாதையன் அந்த குழந்தையை கொன்று விடலாம் என சின்னமாவிடம் கூறியுள்ளார். இதற்கு சின்னமா எதிர்ப்பு தெரிவிக்கவே அவரை தள்ளிவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு மாதையன் வெளியே ஓடி உள்ளார். அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் சின்னம்மா அவரை தேடிச் சென்றார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
கைது
இந்நிலையில் இரவு வந்த மாதையன் வீட்டின் அருகில் உள்ள பாறை மீது குழந்தையை வீசி விட்டு சென்றுள்ளார். இதை கவனித்து விரைந்து சென்ற சின்னம்மா குழந்தையின் கன்னத்தில் காயம் இருந்ததை கண்டு உடனடியாக குழந்தையை தூக்கிக்கொண்டு அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த கெலமங்கலம் காவல் துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார் குழந்தையை அடித்து கொன்ற மாதையனை நேற்று கைது செய்தனர்.
தொடர்ந்து பெண் குழந்தை பிறந்துள்ளதால் தந்தையே குழந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.