மணிப்பூர் கலவரம், பின்னணியில் இருக்கும் சீனா - அதிர்ச்சி தகவலை கூறிய முன்னாள் ராணுவ தளபதி!
பற்றி எரியும் மணிப்பூர் கலவரத்தின் பின்னணியில் சீனா உள்ளது என்று முன்னாள் ராணுவ தளபதி கூறியுள்ளார்.
ராணுவ தளபதி
ராணுவத்தின் 28வது தலைமை தளபதியாக பணியாற்றியவர் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே. ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் சர்வதேச மையத்தில் "தேசிய பாதுகாப்புக் கண்ணோட்டம்" என்ற தலைப்பில் செய்தியாளர்களுடன் உரையாடினார். அதில் பேசிய அவர், "உள்நாட்டு பாதுகாப்பு மிகவும் முக்கியமானது.
அண்டை நாடுகளில் நிலையற்ற தன்மை இருந்தாலும் சரி, நமது எல்லை மாநிலங்களில் நிலையற்ற தன்மை இருந்தாலும் சரி, அது நமது நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்கு கேடானது. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டத் தேவையான சிறந்த நடவடிக்கைகளை பொறுப்பில் இருப்பவர்கள் நிச்சயம் எடுப்பார்கள். இதில், இரண்டாவது கருத்து தேவையில்லை" என்று கூறினார்.
சீனாவின் உதவி
இதனை தொடர்ந்து, அவர் கூறுகையில், "மணிப்பூர் வன்முறையின் பின்னணியில் வெளிநாட்டு ஏஜென்சிகளுக்கு உள்ள தொடர்பை நிராகரித்துவிட முடியாது. நிச்சயமாக சீனாவின் பங்கு இருக்கிறது. அங்குள்ள பல்வேறு கிளர்ச்சிக் குழுக்களுக்கு சீனா உதவுகிறது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
பல ஆண்டுகளாக சீனா உதவி வருகிறது. அந்த உதவி தொடர்ந்து இருந்து வருகிறது என்றே நான் நம்புகிறேன். இந்த வன்முறையால் பலனடைபவர்கள் அமைதி திரும்ப விரும்ப மாட்டார்கள். அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகும் மணிப்பூரில் வன்முறை தொடர்வதற்கு இதுவும் ஒரு காரணம்.
எனினும், அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.