பெண் அமைச்சருக்கு அடக்கம் வேண்டும் - பெரியார் பேரன் ஈவிகேஎஸ் பேச்சால் சர்ச்சை
பெண் அமைச்சருக்கு அடக்கம் வேண்டும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியுள்ளார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன்
இன்று பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்.எல்.ஏ ஈரோட்டில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். ஈவிகேஎஸ் இளங்கோவன் பெரியார் ஈ.வெ.ராமசாமியின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரன் ஆவார்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். கள்ளுக்கடைகளை திறப்பதால் உடல்நிலையை பாதிக்காது. இது பனை விவசாயிகளுக்கும் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
திருமாவளவன்
கட்சி கொள்கையை தெரிவிக்காதவர்கள் எல்லாம், ஆட்சியை பிடிப்போம் என சொல்லும் போது, திருமாவளவன் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று பேசியது தவறில்லை. 2026 தேர்தலில் மத வெறியர்களுக்கு மிகப்பெரிய தோல்வியை தரவேண்டும் என்பதே திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் முதல் கடமை.
எச்.ராஜா ஓய்வு பெற வேண்டிய ஆளு. கவுன்சிலர் தேர்தலில்கூட வெற்றி பெற முடியாத அவர் ஒரு காலாவதியான ராஜா, காலாவதியான ராணியுடன் இருக்க வேண்டியவர் என பேசினார்.
நிர்மலா சீதாராமன்
மேலும் நிர்மலா சீதாராமன் குறித்த கேள்விக்கு, அமைச்சராக இருப்பவருக்கு அதுவும் பெண் அமைச்சராக இருப்பவருக்கு கொஞ்சம் அடக்கம் வேண்டும் ஒரு பணிவும் வேண்டும். ஆனால் இது எதுவுமே அவரிடம் இல்லை. அன்னப்பூர்ணா உரிமையாளர் ஜிஎஸ்டி யை முறைப்படுத்துங்கள் என சொன்னதற்கு, ஆளை வைத்து மிரட்டியும், போன் மூலம் மிரட்டியும், மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ எடுத்து வெளியே காட்டியது கேவலமான விஷயம்.
மன்னிப்பு கேட்கும்போது நிர்மலா சீதாராமன் முகத்தில் எந்த உணர்வும் இல்லை. அப்படியே கல் போல உட்கார்ந்துள்ளார். மனிதனை மதிக்கும் மனித தன்மை நிர்மலா சீதாராமனிடம் இல்லை என பேசியுள்ளார்.
வானதி சீனிவாசன் கண்டனம்
ஈவிகேஎஸ் இளங்கோவனின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் பெரியார் பிறந்த நாள் அன்று பெண் என்றால் அடக்கம் பணிவு வேண்டும் என பிற்போக்குத்தனமான பேச்சை பெரியார் குடும்பத்திலிருந்து வந்த ஒருவரே பேசுவதா என சமூக வலைத்தளங்களில் இவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பெண்களை அடிமைகளாக முன்னிறுத்த முயலும் உங்கள் பிற்போக்குத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம், திரு. @EVKSElangovan அவர்களே,
— Vanathi Srinivasan (@VanathiBJP) September 17, 2024
இந்தியாவின் நிதி பொருளாதாரத்தை நிர்வகிக்கும் முக்கிய பொறுப்பில் உள்ள நமது மத்திய நிதியமைச்சர் திருமதி. @nsitharaman அவர்களைப் பார்த்து, “ஒரு பெண் அமைச்சருக்கு…
இவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், அரசியல் அதிகாரமிக்க பொறுப்பில் உள்ள ஒரு பெண்ணுக்கு அடக்கம் தேவை என்ற உங்களின் கூற்று, உங்கள் கட்சியைச் சார்ந்த திருமதி. சோனியா காந்தி அம்மையார் உட்பட அனைத்து காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி பெண் தலைவர்களுக்கும் பொருந்துமா? ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறுக்க நீங்கள் யார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இளையராஜா சர்ச்சை
சர்ச்சை கருத்துக்கு பெயர் பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் சில மாதங்களுக்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும் போது, பணம் வந்துவிட்டால் தமிழ்நாட்டில் சில அகராதிகள் இருக்கிறார்கள். கேட்டால் உண்மையிலேயே நான் இசை மன்னன் எனச் சொல்லி கொள்கிறார்கள். தபேலா எடுத்து அடிக்கிறவர்கள் எல்லாம் இசையமைப்பாளராக ஆகிவிட முடியாது.
'பணமும் புகழும் வந்த உடன் தங்களை உயர்ந்த ஜாதி என நினைத்துக் கொள்கிறார்களே' என ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சிப்பதும் அதற்கு கி. வீரமணி கைதட்டுவதும் இதுதான் இளையராஜாவை விமர்சிக்கின்ற முறையா..? இந்த சாதிய மனநிலை அதுவும் பெரியார் மேடையில் நிகழ்ந்தது பெரிதும் கண்டிக்கத்தக்கது. pic.twitter.com/kPo9AudLIU
— pa.ranjith (@beemji) April 23, 2022
வறுமையில் சாப்பாட்டுக்கே வழி இல்லாதபோது கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்கள், பணமும் புகழும் வந்த பிறகு தன்னை உயர் சாதி என நினைத்துக் கொள்வது என்ன நியாயம்? என இசையமைப்பாளர் இளையராஜாவை சாதி ரீதியாக விமர்சித்திருந்தார்.
அதற்கு முன் அதிமுகவை சேர்ந்த தனபால் சபாநாயகராக பணியாற்றிய போது, அவரின் முகமே சரியில்லையே எப்படி அவர் சபாநாயகராகச் செயல்படுவார் என சந்தேகப்பட்டேன். சட்டமன்றத்தில் அவரின் செயல்பாடுகள் மூலம் அவர் முகம் மட்டுமல்ல; அகமும் சரியில்லாதவர் என்பதை உண்மையாக்கிவிட்டார் என தோற்றம் குறித்து விமர்சித்ததால் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.