நீட் தேர்வை கொண்டுவந்ததே திமுகவும் காங்கிரஸும்தான் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
நீட் தேர்வை ரத்து செய்ய திமுக என்ன நடவடிக்கை எடுத்தது என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "நீட் தேர்வு ரத்து செய்வதற்கு எங்களிடம் ரகசியம் உள்ளது என தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி சொன்னார். ஆனால் ஆட்சி பொறுப்பேற்று 41 மாதங்கள் ஆகியும் அந்த ரகசியம் சொல்ல்லப்படவில்லை.
நீட் தேர்வு
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 1 கோடி பேரிடம் கையெழுத்து பெற்றதாக அறிவித்தார்கள். ஆட்சி பொறுப்பேற்று 41 மாதங்கள் ஆகியும் நீட் தேர்வை ரத்து செய்ய என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என தெரியவில்லை.
இப்படி மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள் திமுகவும், திமுக அரசும். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என நம்பி ஏமாந்த அனிதா போன்ற மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்து கொண்டனர். திமுக அரசின் இந்த பொய்யான வாக்குறுதியால் விலை மதிப்பில்லாத மாணவ மாணவிகளின் உயிர்களை இழந்து விட்டோம்.
காங்கிரஸ் ஆட்சி
நீட் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ் திமுக கூட்டணிதான். 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதுதான் நீட் தேர்வுக்கு அறிவிப்பு வந்தது. அப்போது திமுகவை சேர்ந்த காந்தி செல்வன் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சராக இருந்தார். இப்போது ரத்து செய்வோம் என நாடகமாடுவதும் திமுகதான்.
நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு திமுக என்ன அழுத்தத்தை கொடுத்தது? இதே போல் காவேரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறை படுத்தாமல் இருந்த போது அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கினார்கள்" என பேசினார்.