தமிழகத்தை போதைப்பொருள் புழக்கத்திலிருந்து மீட்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
போதை விற்பனையின் பின்னணியில் உள்ளவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுசெயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் நிலவும் போதை பொருள் புழக்கம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், சேலம் மாநகரின் மையப் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான ஐந்தடுக்கு கட்டிடத்தில் போதை மருந்துகள் மற்றும் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருவதாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் போதை மற்றும் கஞ்சா போதையில் மயங்கி கிடப்பதாகவும் வரும் ஊடகச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
விடியா திமுக ஆட்சி
காவல் நிலையத்திற்கு அருகிலேயே உள்ள இடத்தில் கூட போதைப்பொருட்கள் சர்வசாதாரணமாக கிடைப்பது என்பது இந்த விடியா திமுக ஆட்சியில் போதைப்பொருட்கள் எந்தளவு புரையோடிப் போயுள்ளது என்பதற்கு சாட்சி.
இனியாவது காவல்துறை விழித்துக் கொண்டு, போதை விற்பனையின் பின்னணியில் யார் இருந்தாலும் அவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும், சேலம் மட்டுமன்றி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் போதைப்பொருள் புழக்கத்தின் பிடியிலிருந்து மீட்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நேர்மையாக இருக்கும் ஒரு சில காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்துகிறேன்.