அதிமுக 10% வாக்குகளை இழக்க காரணம் இதுதான் - எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
அதிமுக ஆலோசனைக் கூட்டம்
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "இந்திய அளவில் முதலில் தகவல் தொழில்நுட்ப அணியை உருவாக்கிய கட்சி அதிமுக. அதிமுகவுக்கு எதிரான பொய் செய்திகளை தகவல் தொழில்நுட்ப அணி முறியடிக்க வேண்டும், அந்த வலிமை உங்களுக்கு உள்ளது.
இளைஞர்கள் வாக்கு
கடைசி கட்டத்தில் இருக்கும் மக்களுக்கும் அதிமுக செய்த சாதனைகள் சென்று சேர வேண்டும். யூடியூப் சேனல்கள், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் அதிமுக தொடர்பான செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். உள்ளூர் மக்கள் சார்ந்த பிரச்னைகளை காணொலிகளாக பதிவிட வேண்டும். சமூக வலைத்தளத்தில் உங்கள் பதிவுகள் யாருக்கும் அஞ்சாமல் கண்ணியத்தோடு இருக்க வேண்டும். தரம் தாழ்ந்த விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களே உள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைய உங்களது பங்கு மிக முக்கியம். மாவட்டச் செயலாளர்கள் உடைய பணிகளை காணொலிகளாக பதிவிடுவது தகவல் தொழில்நுட்ப அணியின் பணி கிடையாது.
முதிய தொண்டர்கள் மறைவு, இளைஞர்கள் வாக்குகள் சரிவு என 10% வாக்குகளை நாம் இழந்துள்ளோம். இளைஞர்கள் வாக்கு 40% உள்ளது. அந்த வாக்குகளை ஈர்த்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும். அதனால் இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்களை கவரும் வகையில் செயல்பட வேண்டும்" என பேசியுள்ளார்.