திறந்தது என்னவோ முதலமைச்சர்தான்.. ஆனால் கல்வெட்டில் ஈபிஎஸ் பெயர் - அதிர்ச்சி!
முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்த கட்டிட கல்வெட்டில் ஈபிஎஸ் பெயர் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாலுகா அலுவலகம்
நெல்லை, திசையன்விளையை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க அப்பகுதி மக்கள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த அதிமுக ஆட்சியில் புதிய தாலுகா அலுவலகம் உருவாக்கப்பட்டது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16ஆம் தேதி தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் புதிய தாலுகா அலுவலகம் செயல்படத் தொடங்கியது. அதில், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரில் கல்வெட்டு வைக்கப்பட்டது.
கல்வெட்டில் ஈபிஎஸ் பெயர்
மேலும், திசையன்விளை கால்நடை மருத்துவமனைக்கு அருகில் 3 கோடி ரூபாய் செலவில் புதிதாக இடம் தேர்வு செய்யப்பட்டு தாலுகா அலுவலக கட்டிடமும் அதிமுக ஆட்சி காலத்திலேயே கட்டி முடிக்கப்பட்டது.
அதனை சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிலையில், இரவோடு இரவாக அந்தக் கட்டிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி பெயர் பொறித்த கல்வெட்டைப் பதித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அதனை அங்கிருந்து அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.