தேசிய கட்சிகளுடன் கூட்டணி சேராததற்கு காரணம் இதுதான் - எடப்பாடி பழனிசாமி விளக்கம்
அதிமுக தொண்டனைக்கூட தொட்டுப் பார்க்க முடியாது என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அடுத்த வனவாசியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று(23.10.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், திமுகவில் கருணாநிதி குடும்பத்தை தவிர வேறு யாரும் தலைவர் பதவிக்கு வர முடியாது. கருணாநிதி குடும்பத்தில் பிறந்த ஆண் வாரிசுகள் மட்டுமே திமுகவின் தலைவராக முடியும்.
திமுகவுக்கு சரிவு
அதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை. ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரே இயக்கம் அதிமுகதான். அதிமுக சுதந்திரமாக செயல்படுவதால் தான் எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு கூட கட்சி மறையவில்லை.
நான் கனவு காண்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் அவர் தான் பகல் கனவு காண்கிறார். மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. கூட்டணி இல்லாமல் அதிக வாக்குகள் பெற்ற அதிமுகதான் வலுவான கட்சி.
தேசிய கட்சிகளோடு கூட்டணி
திமுக கூட்டணி வலுவாக இல்லை என்று நான் சொல்லவில்லை கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளே சொல்கிறார்கள். தேசிய கட்சியே எங்களை கூட்டணிக்கு அழைத்தது. ஆனால், யாருடைய அழுத்தமும் இல்லாமல் நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை பேச வேண்டும் என்பதற்காகவே தேசிய கட்சிகளோடு கூட்டணி வைக்கவில்லை.
2026 ல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் எத்தனை அமைச்சர்கள் மீது வழக்கு வருகிறது என்று பாருங்கள். நான் நெடுஞ்சாலை துறையில் ஊழல் செய்ததாக திமுக அமைப்புச் செயலாளர் நீதிமன்றத்துக்குச் சென்றார். பிறகு அவரே அந்த வழக்கை வாபஸ் வாங்குகிறேன் என்றார்.
சிறு வயதில் இருந்து பல வழக்குகளை சந்தித்து வெற்றி பெற்றவன் நான். போட்ட வழக்கை திரும்ப பெறுபவன் அல்ல. அதிமுக தொண்டனைக்கூட உங்களால் தொட்டுப் பார்க்க முடியாது ஸ்டாலின்" என பேசினார்.