தமிழக மீனவர்கள் கைது; அரசுகள் செய்ய வேண்டியது இது தான்..எடப்பாடி பழனிசாமி காட்டம்!
மீனவர்கள் கைது குறித்து நாடளுமன்றத்தில் அழுத்தம் தர வேண்டும் என எடப்படி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள், வலைகள், மீன்கள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து இருந்து வருகிறது.
அன்மையில் இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதி தமிழ்நாட்டு மீனவர்களின் படகு சேதமடைந்து ஒரு மீனவர் கடலில் விழுந்து உயிரிழந்தார். அது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள், 4 நாட்டுப் படகுகளை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வங்கக்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள், 4 நாட்டுப் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழக மீனவர்கள்
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து அராஜக முறையில் சிறைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், ஒன்றிய பாஜக அரசு இதற்கான நிரந்தரத் தீர்வினை எட்ட போதிய முயற்சிகள் எடுக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்தம் உடைமைகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கச்சத்தீவு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து தேர்தல் நேரத்தில் மட்டும் பேசுவதோடு நில்லாமல், தமிழ்நாட்டின் மீனவர்களும் இந்தியர்கள் தான் என்பதை மனதிற்கொண்டு,
இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் நிரந்தர தீர்வை எட்டுமாறு ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், தமிழக எம்.பி.க்கள் இப்பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்திலும் ஒன்றிய அரசிடமும் உரிய அழுத்தத்தை அளிக்குமாறும் வலியுறுத்தினார்.