"அது தற்கொலைக்கு சமம்" காரசாரமாக மோதிக்கொண்ட இபிஎஸ் மற்றும் அமைச்சர் துரைமுருகன்!!
இன்று கூடிய தமிழக சட்டமன்றத்தில் காவிரி விவரகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும் அமைச்சர் துரைமுருகன் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
தனி தீர்மானம்
காவிரி விவகாரம் அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் சூழலில், இன்று தமிழக சட்டமன்றம் கூடியது. கேள்வி நேரம் முடிவடைந்த நிலையில், காவிரி விவகாரத்தில் தனி தீர்மானத்தை தமிழக முதல்வர் முக ஸ்டலைன் முன்மொழிந்தார்.
பின்னர் அந்த தீர்மானத்தில் உரையாற்றிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் திமுக கர்நாடக அரசு தண்ணீரை திறக்க வேண்டும் என தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டு, விவசாயிகள் பயிரிட்ட பயிர்கள் கருகிப்போய்விட்டதே, அதற்கு யார் பொறுப்பு என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அவை முன்னவரும்,தமிழக நீர்வள துறை அமைச்சரான துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராக இருந்த போது, இந்த இலாகாவையும் பார்த்தவர் என்பதை குறிப்பிட்டு, முதலமைச்சர் பெங்களூரு சென்றாரே அங்குள்ள முதல்வரோடு பேசக்கூடாதா என்று கேட்டார் - இதைத்தான் அவர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள் என்று கூறி பேசினால் என்ன ஆகும் என்பது உங்களுக்கு தெரியும் என்றார்.
அது தற்கொலைக்கு சமம்
பல ஆண்டுகாலம் பேசி பேசி பார்த்து முடியாத காரணத்தால்தான் நாம் நீதிமன்றத்திற்கு போனோம் என சுட்டிக்காட்டிய அவர், நீதிமன்றத்திற்கு சென்ற பிறகு கர்நாடகத்தில் பேசி தீர்த்துக் கொள்கிறோம் என்றார்கள் நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து விடுவார்கள் என குறிப்பிட்டு அது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம் என்றார்.
பிறகு மீண்டும் பேசிய எடப்பாடி பழனிசாமி, தற்கொலைக்கு சமம் என்று சொல்லும் வார்த்தை சரியான வார்த்தை இல்லை என தனது கண்டனத்தை பதிவிட்டு, அப்படி பட்ட கட்சியோடு ஏன் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வினவினார்.
அதற்கு பதிலளித்த துரைமுருகன், இந்தியா கூட்டணியில் அணி சேர்வது கொள்கையை விட்டுவிட்டு சேர்வது அல்ல என்றும் பாஜகவை ஆட்சியில் இருந்து எடுப்பதுதான் அக்கூட்டணியின் நோக்கம் என தெளிவுபடுத்தினார்.