205 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து: இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்
இந்தியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 205 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று இந்தியாவுக்கு எதிராக பேட்டிங் தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராலே, டாம் சிப்லே ஜோடி துவக்கம் தந்தது. அக்சர் படேல் 'சுழலில்' சிப்லே (2), கிராலே (9) சிக்கினர். முகமது சிராஜ் 'வேகத்தில்' கேப்டன் ஜோ ரூட் (5) அவுட்டானார். பின் இணைந்த ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் ஜோடி நிதானமாக விளையாடியது. நான்காவது விக்கெட்டுக்கு 48 ரன் சேர்த்த போது முகமது சிராஜ் பந்தில் பேர்ஸ்டோவ் (28) அவுட்டானார்.
பொறுப்பாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் அரைசதம் கடந்தார்.இவர், 55 ரன் எடுத்திருந்த போது வாஷிங்டன் சுந்தர் பந்தில் சரணடைந்தார். போப் (29) நிலைக்கவில்லை. லாரன்ஸ் (46) ஆறுதல் தந்தார். போக்ஸ் (1), பெஸ் (3), லீச் (7) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஆண்டர்சன் (10) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா சார்பில் அக்சர் படேல் 4, அஷ்வின் 3, சிராஜ் 2 விக்கெட் கைப்பற்றினர், முடிவில் தனது முதல் இன்னிங்சில் 75.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 205 ரன்கள் எடுத்துள்ளது இங்கிலாந்து.
இதைத்தொடர்ந்து, தற்போது இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சுப்மான் கில், ரோஹித் இருவரும் களமிறங்கியுள்ளனர்.