திமுகவில் உழைப்பவர்களுக்கு பதவி கிடைக்காது வாரிசுக்கு தான் கிடைக்கும்- எடப்பாடி காட்டம்!
தி.மு.க.வில் உழைத்து ஓடாய் தேய்ந்தவர்களுக்கு பதவி கிடைக்காது வாரிசுகளுக்குதான் பதவி அளிக்கப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
பதவி கிடைக்காது
இந்த ஆண்டின் மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாய் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், நீலகிரி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக கோவை காரமடை பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
எடப்பாடி காட்டம்
அப்போது பேசிய அவர், நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரசும், தி.மு.க.வும்தான், ஆனால் தி.மு.க.வினர் பொய் பேசி நீட் தேர்வை எதிர்க்கின்றனர். நீட் தேர்வை தடுத்த நிறுத்த போராடிய அ.தி.மு.க.தான். தி.மு.க.வில் உழைத்து ஓடாய் தேய்ந்தவர்களுக்கு பதவி கிடைக்காது; வாரிசுகளுக்குதான் பதவி அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடக்கின்றன. தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர். மக்களுக்கான ஆட்சியை கொடுத்தது அ.தி.மு.க.தான். அ.தி.மு.க. பதவிக்கு ஆசைப்படவில்லை.
அதிகார ஆசை இருந்திருந்தால் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் தொடர்ந்திருப்போம். எங்களுக்கு அதிகார ஆசை இல்லை. சிறுபான்மையின மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'இந்தியா' கூட்டணி, 'இந்தியா' கூட்டணி என்கிறார். இவ்வாறு தெரிவித்துள்ளார்.