அண்ணாமலை மெத்தபடித்தவர்; வெறும் வாயால் வடை சுடுவார்...எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
அண்ணாமலை வெறும் வாயால் வடை சுடுகிறார் என எடப்பாடி பழனிசாமி அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
வடை சுடுவார்...
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது அவர், ஈரோடு இடைத்தேர்தலில் திமுக எப்படி நடந்துகொண்டது என்பதை நாடே அறியும். ஜனநாயக முறைப்படி இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்பது பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தெரியும்.
தமிழ்நாட்டில் பாஜக எங்கே வளர்ந்துள்ளது?. 0.52 சதவீதம் குறைவான வாக்குகளையே பாஜக பெற்றிருக்கிறது. 500 நாட்களில் 100 வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் எனக்கூறித்தான் கோவை மக்களின் வாக்குகளை அண்ணாமலை பெற்றார். வேண்டுமென்றே அதிமுகவை குறை சொல்லி திட்டமிட்டு பேசி வருகிறார் அண்ணாமலை.
பாஜக தலைவராக தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசிடம் இருந்து என்ன திட்டங்களை அண்ணாமலை பெற்று தந்திருக்கிறார்?. தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத பாஜக தலைவர் அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார். மற்ற கட்சிகளை அவதூறாக பேசுவதை அண்ணாமலை வாடிக்கையாக வைத்துள்ளார்.
பழனிசாமி விமர்சனம்
அண்ணாமலை மெத்தப்படித்தவர்; மிகப்பெரிய அரசியல் ஞானி. அவரது கணிப்பு அப்படி இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை விட 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை தோல்வி அடைந்துள்ளார். கடந்த தேர்தலில் 18.80% வாக்குகள் பெற்ற பாஜக, இந்த தேர்தலில் 18.2% மட்டுமே பெற்றுள்ளது.
இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மக்களவை தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டு மக்களை பொறுத்தவரை சட்டப்பேரவை தேர்தலுக்கு ஒரு மாதிரியும், மக்களவை தேர்தலில் ஒரு மாதிரியும் வாக்களிக்கின்றனர்.
கடந்த 2014 மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக வேட்பாளர் இப்போதைய கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பெற்ற வாக்குகளை விட 2024 தேர்தலில் அண்ணாமலை வாக்குகளை பெற்றார்.
கடந்த தேர்தலில் 300 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பாஜக தற்போது கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும்.