அதிமுகவிற்கு இன்று நான் பொதுச்செயலாளர்; நாளை யாரும் வரலாம் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
அதிமுகவில் கட்சிக்கு உழைப்பவர்களும், விசுவாசமுள்ளவர்களும் உயர்ந்த பதவிக்கு வர முடியும் என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
அதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
அந்த நிகழ்வில் பேசிய அவர், "கட்சியை உருவாக்கி குறுகிய காலத்திலே மிகப்பெரும் வெற்றியை பெற்றவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அதிமுக தொடங்கிய போது எம்ஜிஆர் சந்தித்த இன்னல்களை விட பலமடங்கு இன்னல்களை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் சந்தித்தார்.
பெண்களுக்கு பாதுகாப்பு
எம்.ஜி.ஆர் காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் அதிமுக பல போராட்டங்களை சந்தித்தது. இப்போதும் அதிமுக போராட்டத்தை சந்தித்து வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் பேசும்போது அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்தது. திமுக எந்த காலத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்ததாக சரித்திரம் கிடையாது.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வில் திமுக எம்.எல்.ஏக்கள் செய்ததை நாடே பார்த்தது. பேரவைத் தலைவரின் கையை பிடித்து இழுத்து திமுகவினர் அதில் போய் அமர்ந்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர்
சட்டமன்றத்தில், பெரும்பான்மையை நிரூபிக்க நடந்த வாக்குபதிவில், சில எட்டப்பர்கள் திமுகவுக்கு ஆதரவாக அதிமுக எதிராக வாக்களித்தனர். அப்படிபட்ட எட்டப்பர்களுக்குதான் கட்சியின் உயரிய பதவியை வழங்கினோம்.
திமுகவில் கருணாநிதி குடும்பம் மட்டுமல்ல, திமுக அமைச்சர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் எம்.பி, எம்.எல்.ஏ ஆக வர முடியும். ஆனால் அதிமுக அப்படி அல்ல. கட்சிக்கு உழைப்பவர்களும், விசுவாசமுள்ளவர்களும் உயர்ந்த பதவிக்கு வர முடியும். அதற்கு சாதாரண விவசாயியான நானே சான்று.
அதிமுகவை பொறுத்தவரை இன்று நான் பொதுச்செயலாளராக உள்ளேன். நாளை இந்த மேடையில் உள்ள யார் வேண்டுமானாலும் வரலாம். தொண்டர்கள் நீங்கள் கூட வரலாம். ஜனநாயக முறைப்படி உள்ள ஒரே கட்சி அதிமுக " என பேசினார்.