திமுக ஆட்சியில் ஊழல் செய்வதில்தான் தமிழ்நாடு முதலிடம் - எடப்பாடி பழனிசாமி
லஞ்சம் கொடுத்தால்தான் திமுக ஆட்சியில் வேலை நடக்கிறது என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டம் சித்தூரில் அதிமுக செயல் வீர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
கூட்டத்தில் பேசிய அவர், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணியை நம்பி தான் கட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார், மக்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறார்.
கூட்டணியில் விரிசல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் செய்த சாதனைகளை நம்பி மக்களை சந்திக்க வில்லை, தேர்தலில் நிற்பதாக தெரியவில்லை. கூட்டணியை நம்பிதான் தேர்தலை சந்திக்கிறார், அதன் மூலமாக தான் வெற்றிப் பெறுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லாக் கூட்டங்களிலும் பேசிக் கொண்டு இருக்கிறார்.
எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி. எங்கள் கூட்டணியில் அரசல் புரசல்கள் எதுவும் இல்லை. பிரிவுகள் இருக்காது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கூட்டணிக் கட்சிகள் திமுக அரசு மீது விமர்சனங்கள் வைக்கவில்லை. இப்போது விமர்சனங்கள் வைக்கிறார்கள் என்றால் திமுக கூட்டணியில் விரிசல் இருப்பதாகத்தான் அர்த்தம்.
ஜோசியம் பழிக்கும்
முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னபடி நான் சொல்லும் ஜோசியம் பழிக்கும். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்கும். மக்களவை தேர்தலில் பெற்ற வாக்குகளை சட்டப்பேரவை தேர்தலுடன் ஒப்பிடக் கூடாது. 2019 தேர்தலை விட 2024 தேர்தலில் அதிமுக அதிக வாக்குகளை பெற்றுள்ளது. 2021 தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 2026 தேர்தலில் அதிக வாக்குகளை பெற அதிமுகவினர் உழைக்க வேண்டும்.
திமுகவினர் மன்னர் ஆட்சி போல் தமிழகத்தில் முடி சூட்டிக்கொள்கிறார்கள். லஞ்சம் கொடுத்தால்தான் திமுக ஆட்சியில் வேலை நடக்கிறது. திமுக ஆட்சியில் ஊழல் செய்வதில்தான் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது" என பேசினார்.