மின் கட்டணம் இவ்வளவா? இனி ஆன்லைனில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும்
மின் கட்டணம் செலுத்துவது தொடர்பாக தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
மின் கட்டணம்
தமிழ்நாட்டில் மொத்தம் 3 கோடியே 32 லட்சம் மின்நுகர்வோர்கள் உள்ளனர். இதில் 23 லட்சம் பேர் இலவச விவசாய மின் இணைப்பை பயன்படுத்தி வருகின்றனர். மற்ற இணைப்புகள் குடியிருப்பு, வணிகம் தொழிற்சாலை பிரிவுகளில் அடங்கும்.
இதற்கான மின் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒரு முறை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வசூல் செய்கிறது. இந்த மின் கட்டணத்தை மின்வாரிய அலுவலகங்களில் உள்ள கவுண்ட்டர்களிலும் ஆன்லைனிலும் செலுத்தலாம்.
ஆன்லைன் பரிவர்த்தனை
இதில் கடந்த ஆண்டு மட்டும் மின்பயன்பாடு கட்டணம், புதிய இணைப்பு கட்டணம் என மொத்தம் 60,505 கோடி மின்சார வாரியம் வசூல் செய்துள்ளது. அதில் ஆன்லைன் மூலமாக மட்டும் ரூ50,217 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
ரூ.20,000 க்கு மேலான பரிவர்த்தனையை ரொக்கமாக பெற கூடாது என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் தற்போது 83% உள்ள ஆன்லைன் பரிவர்த்தனையை 100 சதவீதம் உயர்த்தும் முயற்சியாக, ரூ.5000 க்கு அதிகமாக மின் கட்டணம் இருந்தால் இனி ஆன்லைனில் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.