ஹிந்தி பேசுபவர்கள்....தயாநிதி மாறன் கருத்து - தவறில்லை !! துரை வைகோ
ஹிந்தி பேசுபவர்கள் குறித்த தயாநிதி மாறனின் கருத்து தவறில்லை என துரை வைகோ தெரிவித்துள்ளார்.
தயாநிதி மாறன் கருத்து
திமுக எம்.பி தயாநிதி மாறன் பீகார், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஹிந்தி தெரிந்தவர்கள் தமிழகத்தில் கட்டுமான பணிகளிலும், கழிப்பறை சுத்தம் செய்வதிலும் ஈடுபடுகிறார்கள் என கூறியது பெரும் சலசலப்பை தேசிய அரசியல் வரை ஏற்படுத்தியுள்ளது.
முன்னர் அவர் பேசிய வீடியோ மீண்டும் இணையதளத்தில் வைரலாக "இந்தியா" கூட்டணியில் அங்கம் வகிக்கும் பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தயாநிதி மாறனின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு பாஜகவினர் கடும் கண்டனங்கள் தெரிவித்து வரும் சூழலில், இது குறித்து துரை வைகோ தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
தவறில்லை
அந்த பேட்டியில், “தயாநிதி மாறன் ஹிந்தி பேசும் மக்கள் குறித்து பேசியதில் எந்த தவறும் இல்லை என்று தெரிவித்து ஆங்கிலம் தெரியாததால் அவர்கள் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கட்டட வேலை, சாலை பணி உள்ளிட்ட சாதாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
தமிழக மக்கள் இந்திய எதிர்ப்பு போராட்டத்தை கடைபிடித்ததால், அதிகமாக ஆங்கிலத்தை கற்றனர் என்று சுட்டிக்காட்டி, அதனால் உலக அளவில் பெரிய பதவிகளில் தமிழர்களால் வர முடிந்துள்ளது என்று தெரிவித்தார்.
தயாநிதி மாறனின் பேச்சு வடமாநிலங்களில் வெட்டி ஒட்டி பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பரப்பப்பட்டு வருவதாக குற்றம்சாட்டிய துரை வைகோ, தமிழக பாஜக தரம் இல்லாத அரசியலை செய்து இதனை பரப்பி வருகின்றனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.