காவிரி நீர் விவகாரம்: தமிழக விவசாயிகளை வஞ்சிக்கிறது திமுக அரசு - அண்ணாமலை குற்றச்சாட்டு!
தமிழக விவசாயிகளை திமுக அரசு வஞ்சிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
அண்ணாமலை
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் "காவிரி நதியில் குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததால், இந்த ஆண்டு டெல்டா பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி, 40% குறைந்திருப்பதாக இன்றைய நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது.
முழுக்க முழுக்க திமுகவின் கையாலாகாத்தனமே இதற்குக் காரணம். கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணிக்காக, விவசாயிகள் பற்றியோ, காவிரி தண்ணீர் பற்றியோ, எந்தக் கவலையும் இன்றி, சரியான நேரத்தில் தண்ணீர் பெற்றுக் கொடுக்காமல், தமிழக விவசாயிகளை வஞ்சித்திருக்கிறது திமுக அரசு.
வலியுறுத்தல்
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த உடனேயே, போதுமான அளவு தண்ணீர் இருந்தும், தமிழகத்துக்குச் சேர வேண்டிய தண்ணீரைத் திறந்து விட மறுத்து வந்தது.
அதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டிய திமுக அதற்காக எந்தக் குரலையும் எழுப்பவில்லை. இன்று, டெல்டா விவசாயிகள் 40% குறைவான மகசூலால் பாதிக்கப்பட்டிருப்பதற்கு, இந்த இரண்டு மாநில திமுக காங்கிரஸ் அரசுகளே முழு பொறுப்பு.
போதிய மகசூல் இல்லாமல் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் விவசாயிகளுக்கு, அதற்கான நஷ்ட ஈட்டை, தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.