ஜனநாயக படுகொலை செய்த காங்கிரஸுடனே திமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி - அமித் ஷா தாக்கு
ஜனநாயகத்தை கொன்ற காங்கிரசுடன் திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளதாக அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
அவசர நிலை பிரகடனம்
டெல்லியில் 'அவசர நிலையின் 50 ஆண்டுகள்' என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில்,
1975, ஜூன் 25-இல் நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தியபோது அதிகாரத்தைப் கைப்பற்ற எந்த எல்லைக்கும் காங்கிரஸ் செல்லும் என்பதை அனைவரும் அறிந்துகொண்டனர். 50 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு சம்பவம் குறித்து இப்போது ஏன் பேச வேண்டும் என சிலர் கேட்கின்றனர்.
ஆனால் ஜனநாயகத்தை படுகொலை செய்த அவசர நிலை போன்றதொரு நிகழ்வை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. ஏனெனில், அதுபோன்ற சூழல் மீண்டுமொருமுறை வரலாம். ஆனால் சர்வாதிகாரத்தை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அமித் ஷா தாக்கு
அவசர நிலை காலகட்டத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர்கள், மாணவர் அமைப்பினர், பத்திரிகையாளர்கள் என நாடு முழுவதும் மொத்தம் 1.1 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர். அந்தச் சமயத்தில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி நடைபெற்ற குஜராத் மற்றும் தமிழ்நாடு மாநில அரசுகள் கலைக்கப்பட்டன.
ஆனால் அவற்றையெல்லாம் மறந்து அவசர நிலையின்போது தங்களை 19 மாதங்கள் சிறைவைத்த காங்கிரஸுடன் திமுக, சமாஜவாதி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இவர்கள் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி நடைபெறும் இச்சமயத்தில் ஜனநாயகப் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்புவது வேடிக்கையாக உள்ளது.
அவசர நிலை குறித்து பிரதமர் மோடி எழுதிய நூல் புதன்கிழமை (ஜூன் 25) வெளியிடப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.