கோலி கோஹினூர் வைரம்.. இவர் அதைவிட மேல் - தமிழக வீரர் புகழாரம்!
கோஹினூர் வைரத்தை விட ஜஸ்ப்ரித் பும்ரா அதிக மதிப்பு மிக்கவர் என தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார்.
உலகக்கோப்பை
2024 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்த தொடரின் தொடர் நாயகன் விருது இந்திய வீரர் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கும்,
இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருது விராட் கோலிக்கும் வழங்கப்பட்டது. இதனையடுத்து விராட் கோலி கோஹினூர் வைரத்தை போன்ற மதிப்புடைய வீரர் என்று இந்திய முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து பாராட்டியிருந்தார். இந்நிலையில் கோஹினூர் வைரத்தை விட ஜஸ்ப்ரித் பும்ரா அதிக மதிப்பு மிக்கவர் என தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார்.
புத்திசாலித்தனம்
அவர் கூறியதாவது "அவரை நான் கோஹினூர் வைரத்தை விட விலைமதிப்பு மிக்கவர் என்று கூறியிருந்தேன். உலக கிரிக்கெட்டில் அவர் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளுக்கும் பொருந்தக் கூடிய பந்து வீச்சாளராக இருக்கிறார்.
அழுத்தமான சூழ்நிலையில் வந்து அசத்தலாக செயல்படுகிறார். இங்கே பலரும் அதை செய்வதில்லை. எந்த ஒரு போட்டியிலும், எந்த நேரத்திலும் வெற்றி பெற விரும்பும் கேப்டன் அவரை பயன்படுத்த விரும்புவார்கள். அதுவே அவருடைய சிறப்பாகும். புத்திசாலித்தனம், அற்புதம் ஆகியவை அவருக்கு பொருந்தக்கூடிய வார்த்தைகளாகும்" என்று தெரிவித்துள்ளார்.