ஐடி ரெய்டில் சிக்கிய பால் தினகரன்- கணக்கில் இல்லாத சொத்துக்கள் இருப்பது கண்டுபிடிப்பு
பிரபல கிறித்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்துள்ளது. பிரபல கிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரன், இயேசு அழைக்கிறார் மத பிரச்சார கூட்டம், காருண்யா பல்கலைக்கழகம், பள்ளி நிறுவனங்கள் ஆகியவற்றை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே பால்தினகரன் குழுமம் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில், அவருக்கு சொந்தமான இடங்களில் 3 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த 3 நாட்களாக 28 இடங்களில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை இன்று முடிவடைந்தது.
சோதனையில், இயேசு அழைக்கிறார் அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த நிதியை குறைத்து கணக்கு காட்டியதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல கோடிக்கு பால் தினகரன் மத்திய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளது.
மேலும், பொதுமக்கள் அளிக்கும் காணிக்கை மற்றும் நன்கொடைகளை அறக்கட்டளை மூலம் வரவு வைத்து அந்த நிதியை பயன்படுத்தி வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவித்ததற்கான ஆவணங்கள் பால் தினகரன் பயன்படுத்திய இ-மெயில் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
பால் தினகரன் தற்போது கனடாவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். எனவே, கனடாவில் உள்ள பால் தினகரனை சென்னைக்கு வர வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.