அண்ணா பல்கலைகழக வழக்கு; திருப்பூர் நபருக்கு தொடர்பா? டிஜிபி அலுவலகம் விளக்கம்
அண்ணா பல்கலைகழக பாலியல் வழக்கு தொடர்பாக டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது.
சிறப்பு புலனாய்வு குழு
பாதிக்கப்பட்ட மாணவியிடம் வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், “சார் ஒருவரிடம் ஞானசேகரன் தொடர்பு கொண்டார். அந்த சாருடன் இருக்குமாறு அவர் என்னிடம் கூறினார்” என பாதிக்கப்பட்ட மாணவி மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும், ஞானசேகரனிடம் கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில் ஆபாச படங்கள் இருந்ததாகவும் மற்றும் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை என தமிழ்நாடு டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க. சென்னை அண்ணா நகர் துணை ஆணையாளர் மருத்துவர் புக்யா சினேஹா இகாப் தலைமையில் அனைத்து மகளிர் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டது.
மாணவி வாக்குமூலம்
இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு. இவ்வழக்குகளில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, சில செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் அல்லது முன்னேற்றங்கள் எனக் கூறி சில கருத்துக்களை பொதுவெளியில் ஒளிபரப்பியும் பிரசுரித்தும் வருகின்றன.
குறிப்பாக, கைதான ஞானசேகரன், ஒரு சாரிடம் பேசியதாக சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்ததாகவும்", சிறப்புப் புலனாய்வுக் குழுவானது. பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான ஆபாச பதிவுகள் கொண்ட மின்னணு உபகரணங்களை எதிரியிடமிருந்து பறிமுதல் செய்துள்ளதாகவும்", "திருப்பூரை சேர்ந்த ஒரு நபரும் இதில் எதிரியாக அடையாளம் காணப்பட்டுள்ளார் என்பன உள்ளிட்ட ஆதாரமற்ற தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
தவறான தகவல்
எனினும், இவ்வழக்குகளின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழுவோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ எந்த ஒரு அறிக்கையோ, கருத்தோ எந்த ஒரு தனிநபருக்கோ அல்லது ஊடகத்திற்கோ தெரிவிக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. இவ்வழக்குகள் தொடர்பான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என பொது வெளியில் தற்போது பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை மற்றும் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதவையாகும்.
சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை பற்றிய இத்தகையை ஆதாரமற்ற மற்றும் ஊகத்தின் அடிப்படையிலான தகவல்கள், பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், இவ்வழக்குகளில் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையையும் பாதிக்கக் கூடும்.
இவ்வழக்குகளின் தீவிரதன்மை மற்றும் விசாரணையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, ஊடகங்கள். தனி நபர்கள், சமூக ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் இவ்வழக்கு விசாரணை தொடர்பாக ஊகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியிடுவதை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறான தவறான தகவல்கள். சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்துதுடன். புலன்விசாரணையின் நம்பகத்தன்மையையும் பாதிக்கக் கூடும்" என கூறப்பட்டுள்ளது.

கண்ணாடியை திறந்ததும் அசுர வேகத்தில் தாக்கிய Eastern Indigo Snake... பதறவைக்கும் வைரல் காணொளி! Manithan
