26 வயது இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்தே கொன்ற கும்பல் - தலைநகரில் பயங்கரம்!
இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடூர தாக்குதல்
டெல்லியைச் சேர்ந்தவர் இசார்(26). இவரை கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கும்பல் அந்தக் கொடூரத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது.
இதற்கிடையில் இளைஞரின் தந்தை தனது மகனை சிலர் அடித்தே கொன்றுவிட்டதாக போலீஸில் புகாரளித்துள்ளார். சுந்தர் நகரி பகுதியில் இருக்கும் தனது வீட்டிற்குச் சென்ற போது, உடல் முழுவதும் காயங்களுடன் தனது மகன் அங்கு கிடந்ததை பார்த்ததாகவும்,
இளைஞர் உயிரிழப்பு
வலியால் துடித்துக் கொண்டிருந்த தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதி வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். விசாரணையில், இசார் அந்தப் பகுதியில் அதிகாலையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக சுற்றித்திரிந்ததாகவும்,
அவரை விசாரித்த போது அவர் கையில் கத்தி வைத்திருந்ததால் பாதுகாப்பிற்காக அவரை கட்டி வைத்ததாக கூறியுள்ளனர். மேலும், இசார் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், அதே பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சதுர்த்தி பந்தலில் இருந்து வாழைப்பம் ஒன்றை எடுத்ததாகவும், அவர் பந்தலில் இருந்து பணத்தை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு தாக்கப்பட்டிருக்கிறார் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு பணி
முன்னதாக மகன் இறப்பதற்கு முன்பாக தான் திருடிவிட்டதாக குற்றம் சாட்டி சிலர் தன்னை கம்பத்தில் கட்டி வைத்து குச்சி மற்றும் இரும்புக் கம்பியால் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாக்கியதாக கூறியதாக கூறியிருக்கிறார்.
தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட கமல், கமலின் சகோதரர் மனோஜ், யூனூஸ், கிசான், பப்பு, மற்றும் லக்கி என ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவரும், தாக்கியவர்களும் வேறு வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்தப் பகுதியில் அசம்பாவிதம் ஏற்பட்டு விடாமல் தடுக்கும் நோக்கில் துணை ராணுவப் படை மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.