மருத்துவர் சுட்டுக்கொலை - நோயாளி வேடத்தில் வந்த சிறுவர்கள் வெறிச்செயல்
நோயாளி வேடத்தில் வந்த சிறுவர்கள் மருத்துவரை சுட்டு கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர் கொலை
சில மாதங்களுக்கு முன் கொல்கத்தாவில் மருத்துவமனைக்கு வளாகத்தில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாதுகாப்பு வேண்டும் என மருத்துவர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்களின் பாதுகாப்பில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டுமென உச்சநீதிமன்றம் அறிவுரைகளை வழங்கியது.
டெல்லி மருத்துவமனை
தற்போது டெல்லியில் மருத்துவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஜெய்த்பூர் பகுதியில் அமைந்துள்ள நீமா மருத்துவமனைக்கு(Nima Hospital) இன்று(03.10.2024) நள்ளிரவு 1;30 மணியளவில் 16 மற்றும் 17 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் காயம் ஏற்பட்டுள்ளதாக வந்துள்ளனர்.
அதில் ஒருவர் தனது காலில் விரலில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டதையடுத்து அங்குள்ள செவிலியர்கள் கால் விரலில் உள்ள காயத்துக்கு கட்டுபோட்டுள்ளனர்.
அதன் பிறகு, என்ன மாத்திரை சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்காக டாக்டரை சந்திக்க விரும்புவதாக கூறினார்கள். இதையடுத்து அந்த சிறுவர்கள் டாக்டர் அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
தப்பி ஓட்டம்
உள்ளே சென்ற இளைஞர்கள் கண் இமைக்கும் நேரத்தில் துப்பாக்கியால் டாக்டரை சுட்டு விட்டு தப்பியோடியுள்ளனர். தலையில் குண்டு பாய்ந்த டாக்டர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட டாக்டர் ஜாவித் அக்தர் 55 வயதான யுனானி மருத்துவர் ஆவார்.