டெல்லி எல்லை பதற்றம்: காசிப்பூர், சிங்கு, ஆச்சந்தி, மங்கேஷ், சபோலி, பியாவ், மன்யாரி எல்லைகள் மூடல் - ஏராளமான போலீசார் குவிப்பு
விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக டெல்லி எல்லைகள் தற்போது மூடப்பட்டிருக்கிறது. மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் குடியரசு தினத்தன்று, விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது அந்த பேரணியில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அது கலவரமாக மாறியது.
வன்முறையில் நடந்த கல்வீச்சிலும், போராட்டக்காரர்கள் எதிர்தாக்குதல் நடத்தியதாலும் 400க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் போராட்டக்காரர்களில் சிலர் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டனர். தேசியக் கொடியை கீழே இறக்கி, அந்த கம்பத்தில் பிரிவினைவாத கொடியை பறக்க விட்டனர்.
போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், கடுமையான தடியடி நடத்தியும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். வன்முறை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வன்முறையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் டிராக்டர் பேரணியை முடித்து கொண்டு திரும்பிய விவசாயிகள், அவர்கள் ஏற்கனவே போராட்டம் நடத்திய எல்லைப்பகுதிகளில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால் எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
விவசாயிகள் போராட்டம் காரணமாக காசிப்பூர், சிங்கு, ஆச்சந்தி, மங்கேஷ், சபோலி, பியாவ் மன்யாரி எல்லைகள் தற்போது மூடப்பட்டுள்ளது. போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டுவிடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் டெல்லி எல்லையில் ஒருவிதமான பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.