நான் தான் முதலமைச்சர் என்று நீங்கள் முடிவு செய்து விட்டால்... கமல்ஹாசன் பேச்சு
தமிழகத்தில் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கான திட்டங்கள் தன்னிடம் உள்ளதாக கூறியுள்ளார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன். நேற்று ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி, ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிகளில் அந்த கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகள் கேட்டு கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார்.
பின்னர் அங்கிருந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட திருநகர்காலனியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன் என்று கூறி ஆட்சிக்கு வந்தார்கள். ஏழைகள் இல்லாத நிலை உருவாகி விட்டதா? தாய் மொழியை காப்பாற்றி விட்டார்களா? நாங்கள் தாய் மொழியை மீட்க குரல் கொடுப்போம்.
இந்த தலைமுறையினரின் வாழ்க்கை மலர நாங்கள் வந்து இருக்கிறோம். நாளைய சரித்திரத்தை மாற்ற வாய்ப்பு கொடுங்கள். நான் தற்போது திரும்பி பார்க்கும்போது பெரிய தலைவர்கள் இல்லை என்ற ஏக்கம் உள்ளது. இதே நிலை தற்போதைய குழந்தைகளுக்கு இருக்கக்கூடாது. நான் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடியும் என்றேன்.
அதையே ஆண்டுக்கு 10 லட்சம் பேர் என்று கூறுகிறார்கள். நான் அதற்கான திட்டம் வைத்து உள்ளேன். நீங்கள் என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்.
வீடுக்கு ஒரு கணினி கொடுப்பேன் என்று கூறுகிறேன். அது இலவசம் அல்ல. உங்களுக்கான முதலீடு அது. அரசுக்கும், மக்களுக்குமான பாலம். நான் முதல்-அமைச்சர் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டால், அதன்பின்னர் நீங்கள் நேரடியாக என்னோடு பேசலாம் என்றார்.